திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் பஸ் நிலையம் அருகே கிடந்த பணம், நகை அடங்கிய கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த, சைக்கிள் கடைக்காரார் உள்பட 3 பேரை போலீசார் பாராட்டினர். கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பஸ் நிலையம் அருகில் சைக்கிள் கடை வைத்திருப்பவர் ஹஜ்பாஷா. நேற்று காலை வழக்கம்போல் தனது கடையை திறப்பதற்காக ஹஜ்பாஷா சென்றார்.
அப்போது, கடை வாசலில் ஒரு கைப்பை கிடந்தது. இதை பார்த்த அவர், அந்த பையில் என்ன இருக்கிறது என்று எடுத்து பார்த்தார். அதில், சுமார் 4 சவரன் தங்க சரடும், 2500 இருந்தது. உடனே அவர், பக்கத்து கடைகாரர்கள் தமீன், கார்த்திக் ஆகியோருடன் கல்பாக்கம் காவல் நிலையம் சென்றார். அங்கு, நடந்த சம்பவத்தை கூறி, போலீசாரிடம் நகை, பணத்தை 3 பேரும் ஒப்படைத்தனர். அந்த பையை நேர்மையுடன் ஒப்படைத்த 3 பேரையும், போலீசார் வெகுவாக பாராட்டினர்.